பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.இவர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக டிகை நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.ஜவான் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாக உள்ளது.
ஜவான் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த பட பணிகளில் பிசியான ஷாருக்கான், அதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எதிர்பாரா விதமாக விபத்தில் சிக்கி உள்ளார். இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதை பார்த்து பதறிப்போன படக்குழு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்களாம்.
இதையடுத்து இந்தியா திரும்பியுள்ள ஷாருக்கான் தற்போது படிப்படியாக குணமாகி வருகிறாராம். இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியானதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.